சகோதரருக்கு கொரோனா: கங்குலி தனிமைப்படுத்திக் கொண்டார்

தனது அண்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்குலி வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
சகோதரருக்கு கொரோனா: கங்குலி தனிமைப்படுத்திக் கொண்டார்
Published on

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேகாசிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க இணைசெயலாளராக இருந்து வருகிறார். மேற்கு வங்காள மாநிலம் மொமின்புரில் வசித்து வந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான ஸ்னேகாசிஷ்சின் மனைவி மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கடந்த மாதம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக பெஹலாவில் கங்குலி குடும்பத்தினர் வசித்து வரும் பங்களாவில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஸ்னேகாசிஷ் கங்குலிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததை அடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க கங்குலி வீடு அமைந்து இருக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கங்குலி தனது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்தில் வைத்து தான் கிரிக்கெட் வாரிய பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அண்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்குலி வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதேபோல் அவருடன் தொடர்பில் இருந்த பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியாவும் தனது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com