

சென்னை,
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக் தொடரின் தொடக்கப் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ள நிலையில், எதிர்காலத்தில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியையும் இந்தியாவில் நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டாட் க்ரீன்பெர்க் கூறுகையில், "இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனும் எங்களுக்கு மிகவும் வலுவான உறவு உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டை மேலும் விரிவுபடுத்த பல வாய்ப்புகள் உள்ளன. தற்போது உடனடியாக ஆஷஸ் போட்டியை இந்தியாவில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பை பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
மேலும், "உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு குறைந்திருந்தாலும், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இருப்பினும், ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்துவது எளிதான விஷயம் அல்ல, அதற்கு பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடர் என்பது பாரம்பரியமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் மட்டுமே மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவில் அந்த தொடரை நடத்தும் சாத்தியம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்தாண்டு ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 2 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 2023-ஆம் ஆண்டைப் போலவே, 2027-லும் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவினருக்கான ஆஷஸ் தொடர்களும் ஒரே நேரத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட உள்ளது.