

புதுடெல்லி,
2027-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வென்று, உலகக் கோப்பையை வென்ற திருப்தியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து டேவிட் மில்லர் கூறுகையில், சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “உலகக் கோப்பையை வெல்வதே எனது லட்சியம். ஒரு உலகக் கோப்பையை வென்ற திருப்தியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புகிறேன். அந்த உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெறுவதுதான் எனது இலக்கு” என்றார்.
அணியில் தனது இடம் உறுதி என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் மில்லர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அணியில் இடம்பிடிப்பதற்கும், முடிந்த அளவுக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கும் இப்போதே கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறினார்.
37 வயதான டேவிட் மில்லர் இதுவரை 178 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள், 24 அரைசதங்கள் உள்பட 4,611 ரன்கள் குவித்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.