

சென்னை,
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், பியுஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனுகுமார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சியை முடித்து கொண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று மதியம் தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில், அணி வீரர்கள் மஞ்சள் நிற சீருடையுடன் புறப்படும் புகைப்படங்களை வெளியிட்டு விசில் போடு என பதிவிடப்பட்டு இருந்தது.
அந்த அணியில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வலது கை பேட்ஸ்மேனான இம்ரான் தாஹிர் இடம் பெற்றுள்ளார். அவர் மேற்கூறிய டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், என் இனிய தமிழ் மக்களே. உங்கள் நலம் நலமறிய ஆவல். பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசிகளோடு. பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த எடுடா வண்டிய... போடுடா விசில... என தெரிவித்து உள்ளார்.