கொல்கத்தாவிற்கு எதிரான தோல்வி; விராட் கோலி தனியாளாக என்ன செய்வார்..? - சுனில் கவாஸ்கர்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்தித்ததற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி கை கொடுத்திருந்தால் இந்த போட்டியில் விராட் கோலி 120 ரன்கள் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விராட் கோலி தனியாளாக எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இன்று யாராவது ஆதரவு கொடுத்திருந்தால் 83-க்கு பதிலாக அவர் கண்டிப்பாக 120 ரன்கள் அடித்திருப்பார்.

கிரிக்கெட் என்பது தனிநபர் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் விளையாட்டு கிடையாது. இது அணி விளையாட்டாகும். விராட் கோலிக்கு இன்று எந்த சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. அது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com