தோனி ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல.. அவரிடம் மந்திரக்கோலும்.. - சிஎஸ்கே பயிற்சியாளர்

image courtesy:PTI
சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 5 தோல்விகள் பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் லக்னோ அணியுடன் மோத உள்ளது.
இதனிடையே முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் இருந்து விலகினார். அதனால் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தோனி கேப்டனாகியும் சிஎஸ்கே தோல்வியை தழுவியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டனாக வந்ததும் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றுவதற்கு தோனி ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- " தோனியின் செல்வாக்கு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் அவர் ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல. அவரிடம் ஒரு மந்திரக்கோலும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர் வெற்றியை முன்பே கொண்டு வந்திருப்பார். நாங்கள் தோனியுடன் சேர்ந்து வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம், நிச்சயமாக, எங்கள் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும், அதிக ஆற்றல் தேவைப்படும் சூழ்நிலைகளில் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.
நாங்கள் அதை சிறிய படிகளாக கவனித்து 3 துறைகளிலும் சிறந்து விளங்க தொடர்ந்து உழைக்க வேண்டும். அதன் பின்னர் போட்டியிடத் தொடங்க வேண்டும். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் நாங்கள் போதுமான போட்டியை வெளிப்படுத்தாதது மிகவும் வேதனையாக இருந்தது. எனவே, நிச்சயமாக உள்ளுக்குள் நிறைய தேடல்கள் இருந்தன. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய நிறைய வேலைகளும் இருந்தன. நாங்கள் உத்வேகத்தைப் பெறுவதற்கு எங்களிடம் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. அவை வார்த்தைகளைப் பற்றியது அல்ல. அது எங்கள் வீரர்கள் எந்த சூழ்நிலைகளையும் சமாளிப்பதை பற்றியதாகும்" என்று கூறினார்.






