துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெற்கு மண்டலம்

Image Courtesy: @BCCIdomestic
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். மத்திய மண்டலம் தரப்பில் சரன்ஷ் ஜெயின்5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய மண்டலம் 511 ரன்கள் குவித்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 194 ரன்களும், படிதார் 101 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 362 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டலம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மரன் ரவிச்சந்திரன் 37 ரன்களுடனும், ரிக்கி புய் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி தனது 2வது இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அத்துடன் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தெற்கு மண்டல அணி 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தெற்கு மண்டல அணி தரப்பில் அதிகபட்சமாக அன்கித் சர்மா 99 ரன் எடுத்தார். இதையடுத்து மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.






