துலீப் கோப்பை: ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி சாம்பியன்

யாஷ் ரத்தோட் ஆட்ட நாயகன் விருதையும், சரன்ஷ் ஜெயின் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
image courtesy:@BCCIdomestic
image courtesy:@BCCIdomestic
Published on

பெங்களூரு,

62-வது துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு- மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். மத்திய மண்டலம் தரப்பில் சரன்ஷ் ஜெயின்5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய மண்டலம் 511 ரன்கள் குவித்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 194 ரன்களும், படிதார் 101 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 362 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு அணி 121 ஓவர்களில் 426 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அங்கித் ஷர்மா 99 ரன்னும், ஆந்த்ரே சித்தார்த் 84 ரன்னும், ரவிச்சந்திரன் சமரன் 67 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இலக்கை நோக்கி களமிறங்கிய மத்திய மண்டல அணி 20.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது. யாஷ் ரத்தோட் ஆட்ட நாயகன் விருதையும், சரன்ஷ் ஜெயின் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com