

லண்டன்,
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினர். 7 ஓவர்களில் 28 ரன்கள் கிடைத்தன. ஆனால் 11 ரன்களை எடுத்து இருந்த ரோகித் சர்மா கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதன்பிறகு 17 ரன்களில் ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ராகுல். இந்தத் தொடரில் அவ்வப்போது மட்டும் ரன்கள் எடுத்த புஜாரா இன்றும் ரசிகர்களை ஏமாற்றினார். 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. கோலி 18 ரன்களுடன், ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவெளி முடிந்து ஆட்டம் தொடங்கிய சில இடங்களில் ஜடேஜா ஆட்டம் இழந்து (10 ) ரன்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்திய வீரர்கள் அடுத்து அடுத்து அவுட் ஆகி வெளியேறிய நிலையில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்சை 5 ரன்களிலும், ஹமித்தை ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்கச் செய்து பும்ரா அசத்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை 21 ரன்களில் உமேஷ் யாதவ் போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் 26 ரன்களும், ஓவர்டான் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.