

நார்தம்டன்,
இங்கிலாந்தில் ஒரு நாள் கோப்பை என்ற பெயரில் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நார்தம்டன்ஷைர் அணிக்காக களம் இறங்கிய இந்தியாவின் பிரித்வி ஷா ருத்ரதாண்டவமாடினார்.
தொடக்க வீரராக களம் புகுந்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்த அவர் 244 ரன்கள் (153 பந்து, 28 பவுண்டரி, 11 சிக்சர்) குவித்து மலைக்க வைத்தார். லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட்டில் (சர்வதேச ஒரு நாள் போட்டி உள்பட) ஒரு வீரரின் 6-வது அதிகபட்சமாக ஸ்கோராக இது பதிவானது.
இந்த வகையில் கடந்த ஆண்டு அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகத்தின் என்.ஜெகதீசன் 277 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது. அவரது இரட்டை சதத்தால் நார்தம்டன்ஷைர் அணி 8 விக்கெட்டுக்கு 415 ரன்கள் திரட்டியதுடன் வெற்றியும் பெற்றது.