இங்கிலாந்து வீராங்கனை கேத்ரின் பிரண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் பிரண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
image courtesy: England cricket twitter via ANI
image courtesy: England cricket twitter via ANI
Published on

லண்டன்,

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் பிரண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதாகும் கேத்ரின் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். 2004-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கேத்ரின், தன்னுடைய 3-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி 52 ரன்களை குவித்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள அணிக்கு உதவினார்.

கேத்ரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 21.52 சராசரி மற்றும் 51.1 ஸ்டிரைக் ரேட்டில் 51 விக்கெட்டுகளுடன், பெண்கள் டெஸ்டில் இங்கிலாந்தின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரண்ட் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரியில் பெண்கள் ஆஷஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

ஓய்வு குறித்து கேத்ரின் பிரண்ட் கூறியதாவது:-

ஒரு வீராங்கனையாக விலகிச் செல்வதற்கு இது தெளிவான நேரம் இல்லை என்று நான் உணர்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பற்றிய எண்ணங்கள் மேலும் மேலும் எழுந்தது. எனவே உணர்ச்சிகரமான முடிவை விட புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடிவு செய்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது உண்மையிலேயே வேதனை தரும் தேர்வாக இருந்தது.

ஆனால் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த கடினமான முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார். இங்கிலாந்து வருகிற ஜூன் 27-ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com