

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 83 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து வீராங்கனை சோபி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஏமி ஜோன்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீராங்கனை கிரந்தி கவுட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 115 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு 457 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களுடனும், சோபி 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தில் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 327 ரன்கள் தேவை. அதேவேளை, இந்தியா வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.