

காலே,
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தனது 100வது டெஸ்ட் சிக்ஸரை விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளநிலையில், அவருக்கு டெல்லி முதல்-மந்திரி வாழ்த்து கூறி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிக்ஸர்களில் சதம் அடித்த ரிஷப் பண்ட்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக வேகமாக 100 சிக்ஸர்களை எட்டிய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அச்சமின்றி விளையாடி, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரரின் அற்புதமான சாதனை இது. இந்தியாவுக்காக இன்னும் பல பிரமாண்டமான சிக்ஸர்கள், மறக்க முடியாத இன்னிங்ஸ்கள் மற்றும் வெற்றியை தேடித்தர வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரது இந்த அதிரடி ஆட்டம் இந்தியாவின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவியது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதற்கு பதிலளித்த இலங்கை 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியாவுக்கு 178 ரன்கள் முன்னிலை கிடைத்தது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
372 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. தனுஷா 25 ரன்களுடனும், கேப்டன் தனஞ்சய டி சில்வா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இலங்கை இன்னும் 288 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
போட்டியில் இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இலங்கை வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்தியா மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டியை கைப்பற்றும்.
இதனால் காலே டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக அமைய உள்ளது.