

ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், டி20 தொடர் யார் வசம் என்பதைத் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஜமைக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த பதும் நிசாங்கா 26 (17) ரன்களிலும், குசல் மெண்டிஸ் 5 (5) ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த பவன் ரத்நாயக்க சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் (கோல்டன் டக்) அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின்னர், கமில் மிஷாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க முயன்றனர். ஆனால், நிதானமாக ஆடிய கமில் மிஷாராவும் 28 (23) ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 20(15) ரன்களிலும் தசுன் ஷனகா 16(13) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் துனித் வெல்லாலகே - வனிந்து ஹசரங்கா ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஸ்கோரை உயர்த்தி வந்தநிலையில், ஹசரங்கா 21(13) ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டானார்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 43(28) ரன்கள் எடுத்தார். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்க உள்ளது.