

புது டெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் (Shapoor Zadran), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ-வில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் இதன் நான்காம் நிலையில் (Stage 4) உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷபூரின் உடல்நிலை குறித்து அறிந்த ஆப்கான் நட்சத்திர வீரர் ரஷித் கான், உடனடியாகச் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷித் கான், பிசிசிஐ (BCCI) செயலாளர் ஜெய் ஷா மற்றும் தனது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் பேசி, ஷபூருக்கான விசா மற்றும் மருத்துவ வசதிகளை விரைவுபடுத்தினார்.
2015-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் தனது முதல் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தபோது, அதில் முக்கிய பங்கு வகித்தவர் இவரே. ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடி 80-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் முகமாகத் திகழ்ந்த "தி லெஜண்ட்" ஷபூர் சத்ரான் விரைவில் குணமடைய உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.