'மேட்ச் பிக்சிங்' சூதாட்ட புகார்: தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கைது

தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே (வயது 40), தமி சோல்கிலே (வயது 44) மற்றும் எதி எம்பலாட்டி (வயது 43) ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு உள்ளூர் டி20 தொடரான ராம் ஸ்லாம் தொடரில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர்கள் மேட்ச் பிக்சிங் -ல் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போட்டியின் முடிவை மாற்றுவதற்காக மூவரும் பரிசுகளை ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன்னாள் வீரர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களில் சோல்கிலே தென் ஆப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சோட்சோப் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். 5 டெஸ்ட், 61 ஒரு நாள் மற்றும் 23 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி மொத்தம் 121 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com