பஸ் டிரைவர் முதல் அணியின் சீனியர் வீரர் வரை.... - ஷஷாங் சிங் பேட்டி

image courtesy: PTI
மும்பையை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது. நடப்பு தொடரில் பஞ்சாப் சிறப்பாக செயல்பட அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். இந்நிலையில். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் அதிரடி வீரர் ஷஷாங் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த ஐ.பி.எல் தொடரில் நாங்கள் சேர்ந்த முதல் நாளில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் எங்கள் மொத்த அணிக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அதாவது இந்த அணியின் மூத்த வீரர் சாஹலுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் எல்லோருக்கும் சமமாக கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.
அவர்கள் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் பஸ் டிரைவர் முதல் அணியின் சீனியர் வீரர் வரை ஒரே மரியாதையை இதுவரையில் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துள்ள இந்த விஷயம் எங்கள் அணியை பற்றி நிறைய விஷயங்களை சொல்கிறது. பாண்டிங் எங்கள் அணியின் கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறார்.
அவர் எங்களின் மனநிலை மற்றும் நம்பிக்கைகளை மாற்றியிருக்கிறார். எனவே, இந்த விஷயத்திற்கு அனைத்து பெருமையும் அவருக்கே போய் சேர வேண்டும். ஏனென்றால் வெளிப்படையாக விளையாட்டுப் பற்றிய எங்களது பார்வையை மாற்றியவர் அவர்தான்.
நான் கலாச்சாரம் என்று சொல்வது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அக்கறை காட்டிக் கொள்ளுதல், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துதல் போன்றவை. இதுவெல்லாம் சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் ஆனால் செய்வதற்கு மிகவும் கடினமானது. இதைத்தான் எங்கள் அணியில் ரிக்கி பாண்டிங் வளர்த்து எடுத்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.