இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு - மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வானார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு - மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்
Published on

மும்பை,

லோதா கமிட்டி சிபாரிசின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் நிர்வாக சீர்திருத்தத்தை அமல்படுத்தி புதிய விதிமுறையின் படி நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் வரை கிரிக்கெட் வாரிய நிர்வாக பணிகளை கவனிக்க வினோத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இருந்து நிர்வாக கமிட்டியினர் தான் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவின் பேரில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் மும்பையில் 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்கள் என்.சீனிவாசன், அனுராக் தாகூர், முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் டெல்லி மற்றும் மும்பையில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் பட்டேலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் வேட்பாளராக கங்குலி மாற்றம் செய்யப்பட்டார்.

இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையத்தில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 47 வயதான கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற முடியாது என்ற அவப்பெயரை மாற்றியவரும், ஆக்ரோஷமான கேப்டன் என்ற பெயரை பெற்றவருமான கங்குலி 2012-ம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து விடைபெற்றார். அவர் தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருகிறார். கங்குலியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற 23-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய பொதுகுழுவில் கங்குலி தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதுடன், பதவி பொறுப்பையும் ஏற்பார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக போட்டியின்றி தேர்வானார்.

லோதா கமிட்டி சிபாரிசின் படி மாநிலம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் தொடர்ந்து 6 வருடத்திற்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. அந்த பதவி காலம் முடிந்ததும் 3 வருடம் இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும். இதன்படி கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 9 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com