Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter

பட்லர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பட்லர் படைத்தார்.
Published on

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

190 ரன்களுக்குள் இருந்தால் நிச்சயம் எங்களால் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று மைதானத்தில் பனி இருந்ததால் சேசிங் சற்று சுலபமாகவும் இருக்கும் என்று கணித்தோம். மேலும் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்த ஸ்கோர் நிச்சயம் சேசிங் செய்யக்கூடிய ஒன்று தான்.

நாங்கள் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த சில நாட்கள் இடைவெளி உள்ளது. மீண்டும் நாங்கள் ஓய்வெடுத்து பயிற்சி செய்து அடுத்த போட்டிக்கு தயாராக இந்த இடைவெளி உதவும். இந்த போட்டியில் பட்லர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது எங்களுக்கும் சரி, அணிக்கும் சரி, அவருக்கும் சரி மகிழ்ச்சி அளித்துள்ளது.

அவரைப் போன்ற ஒரு வீரர் ஒரு ஆட்டம் க்ளிக் ஆனால் போதும் அடுத்து அவரிடம் இருந்து மிகச் சிறப்பான செயல்பாடு வெளிவரும். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com