

சென்னை,
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளநிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவனம் ஈர்த்துள்ளார். இந்த தொடர் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைய உள்ளது.
2009-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்தான். 2026-ம் ஆண்டு நடைபெறும் இந்த தொடர், அவர் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பையாகும்.
அதேநேரத்தில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும் 5-வது டி20 உலகக் கோப்பை தொடரும் இதுவாகும். அனுபவம், தலைமைத்துவம் மற்றும் அழுத்தமான தருணங்களில் சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவரை இந்திய அணியின் மிக முக்கிய வீராங்கனையாக மாற்றியுள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வழிநடத்திய பெருமையும் ஹர்மன்பிரீத்துக்கு உள்ளது.
அதனால் இந்த முறை டி20 உலகக் கோப்பைக்கு அவர் ஒரு சாதாரண கேப்டனாக அல்லாமல், உலக சாம்பியன் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். இது இந்திய அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
10-வது டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ள ஹர்மன்பிரீத் கவுருக்கு இது ஒரு சாதாரண தொடர் அல்ல. தனது நீண்டகால சர்வதேச பயணத்தில் இன்னொரு மகுடம் சூட்டும் வாய்ப்பாகவே அவர் இதைப் பார்க்கிறார். இந்திய ரசிகர்களும் அடுத்த ஐசிசி கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி வரலாற்றை மீண்டும் படைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.