

துபாய்,
அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தருவதாக தீப்தி சர்மாவை ஹர்மன்பிரீத் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வங்களாதேச அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்களாதேச அணி, இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர், அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்றைய ஆட்டத்தில் நமது வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. பிட்ச் தன்மையைப் புரிந்துகொண்டு வீரர்கள் திறம்பட செயல்பட்டனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சிறிய பார்ட்னர்ஷிப்கள் மிகவும் முக்கியமானவை. நாங்கள் பேட்டிங் செய்தபோது அமைந்த சிறிய பார்ட்னர்ஷிப்கள்தான் போட்டியின் முடிவை மாற்ற உதவின” என்றார்.
இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மாவையும் கேப்டன் வெகுவாக பாராட்டினார்.
“தீப்தி சர்மா பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டார். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்துத் தருகிறார். அவர் இந்திய அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து” என்றார்.