எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்... விராட் கோலி உருக்கம்

எங்கள் அனைவருடனும் ஒன்றாக இன்றிரவு இந்த கோப்பையை உயர்த்தி பிடிக்க தகுதியானவர் அவர் என்று கோலி கூறினார்.
எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்... விராட் கோலி உருக்கம்
Published on

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது.

போட்டி முடிந்த பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலி அளித்த பேட்டியின்போது, இந்த வெற்றியானது, அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கானதும் கூட. 18 ஆண்டுகள் ஆகியுள்ளன. என்னுடைய இளமையை, முதல்தர விளையாட்டை நான் கொடுத்திருக்கிறேன். என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். இந்த நாள் வரும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை.

கடைசி பந்து வீசப்பட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டேன். டி வில்லியர்ஸ் இந்த அணிக்காக செய்த விசயங்கள் பெரியவை. அவரிடம் போட்டி தொடங்குவதற்கு முன்பே இதனை நான் கூறினேன். இந்த வெற்றி எங்களுக்கானது என்பதுபோல், உங்களுக்கானது.

எங்களுடன் அவர் இன்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் பெங்களூரு அணிக்காக அவர் செய்த விசயங்கள் மிக சிறந்தவை. எங்களுக்காக நிறைய ஆட்ட நாயகன் விருதுகளை அவர் பெற்று தந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்று 4 ஆண்டுகளாகி விட்டன.

எனினும் இந்த அணிக்கு, ஒரு நபராக எனக்கு, எங்களுடைய நட்புறவு மற்றும் பெங்களூரு மக்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால், எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர். எங்கள் அனைவருடனும் ஒன்றாக இன்றிரவு இந்த கோப்பையை உயர்த்தி பிடிக்க தகுதியானவர் அவர் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com