

சென்னை,
17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், அதை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களை கைதட்டி பாராட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.