என்னை ஒரு ஆல் ரவுண்டராகவே கருதுகிறேன் - டெல்லி வீரர் பேட்டி

Image Courtesy: @IPL / @DelhiCapitals
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை ஒரு ஆல் ரவுண்டராகவே கருதுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் வீரர் விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் எப்போதும் என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன். தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும். மேலும், இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளுமே அழுத்தமும் பதட்டமும் நிறைந்த போட்டியாக இருக்கும்.
அதிலும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் முன்னிலையில் விளையாடும்போது அது மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சீனியர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்கிறது. சீனியர்களிடமிருந்து எங்களுக்கு சில உதவிகள் கிடைக்கின்றன.
மேலும் எங்களிடம் லக்னோவைச் சேர்ந்த வீரர்கள் உள்ளதால், அவர்களிடமிருந்து இந்த சூழ்நிலைகள் குறித்து நாங்கள் திட்டமிடலை செய்துவருகிறோம். மேலும் டு பிளெசிஸ் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆனாலும், அவர் இப்போட்டியில் விளையாடுவாரா என்ற இறுதி முடிவை நிர்வாகம் தான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






