எனது பந்துவீச்சில் நான் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளேன் - குல்தீப் யாதவ்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலகட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. நான் எனது ஆட்டம் குறித்து புரிதலை இப்போது சிறப்பாக பெற்றுள்ளேன். விக்கெட்டை எப்படி கணித்து ஆடுவது என்பதை அறிந்துள்ளேன். தர்மசாலா விக்கெட் தரமானதாக உள்ளது. ஒரு பந்து வீச்சாளருக்கு பிரதானமே பிட்னஸ்தான்.

நான் அதில் தீவிர கவனம் செலுத்தினேன். அதன் மூலம் நீண்ட ஸ்பெல்களை என்னால் வீச முடிகிறது. அதற்கு நான் என்னை தயார் படுத்திக் கொண்டேன். தொடக்கத்தில் பந்து வீசுவதில் சிரமம் இருந்தது. நிறைய மாற்றங்களை மேற்கொண்டேன். தொடர்ந்து விளையாடினால் ஆட்டம் குறித்த புரிதலை பெற முடியும். எனது பந்துவீச்சில் நான் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளேன். எனது வெற்றிக்கு பக்குவம்தான் காரணம் என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com