

சென்னை,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனை பிரதிகா ராவல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பிரதிகா ராவல் 63 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையில், தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவத்தை பிரதிகா ராவல் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில்,
“நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பெரிய பொறுப்பு. இது எனது முதல் டெஸ்ட் போட்டி என்று நான் நினைக்கவில்லை. அதனால் அழுத்தத்தை மறந்து ஆட்டத்தை ரசித்தபடியே விளையாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இந்த வடிவத்தில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதிலேயே என் கவனம் உள்ளது,” என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசும்போது, 'இந்த வடிவம் ஒரு வீரரின் பொறுமை, மனப்பாங்கை சோதிக்கும். சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும்போது திறமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்' என்று தெரிவித்தார்.
இப்போட்டியில் பிரதிகா ராவல் அரைசதம் அடித்திருந்தாலும் இந்திய அணியால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. 25 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியா அணி 4.3 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.