ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐ.சி.சி

தொடர்ச்சியாக ஐ.சி.சி ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற பி.சி.சி.ஐ-க்கு வாழ்த்துக்கள் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
Image Courtesy: @ICC / @BCCIWomen
Image Courtesy: @ICC / @BCCIWomen
Published on

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகளும், வைஷ்னவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தொடர்ச்சியாக ஐ.சி.சி ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற பி.சி.சி.ஐ-க்கு வாழ்த்துக்கள். மலேசியா கிரிக்கெட் சிறப்பாக நடத்திய இந்தப் போட்டி தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பாராட்டுகள். ஜூனியர் உலகக் கோப்பை மகளிர் விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com