

மும்பை,
50 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்குபெறும். போட்டிகள் ரவுண்ட் 1, ரவுண்ட் 2, சூப்பர்7 என மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது.
தகுதி பெற்ற 14 அணிகளில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் நடத்தப்படும். அதில் ஒரு அணி 2வது சுற்றுக்கு முன்னேறும். அணிகளின் எண்ணிக்கை 12-ஆக குறையும்.
12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் 4ஆவது இடத்தில் உள்ள ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 7 சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். அரையிறுதி போட்டிகள் முடிவில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
2028-ல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமுள்ள 20 அணிகள் தலா 4 அணிகள் வீதம் 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 10' சுற்றுக்கு முன்னேறும்.
10 அணிகள் தலா 5 அணிகள் வீதம் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் 2 அணிகள் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' சுற்றில் மோதும்; வெற்றி பெறும் 2 அணிகள் மீதமுள்ள 2 அரையிறுதி இடங்களைப் பிடிக்கும்.