டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவில்லை என்றால்... - தோல்வி குறித்து பாண்ட்யா கருத்து

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
image courtesy; X (Twitter)
image courtesy; X (Twitter)
Published on

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது.

ஆனால் மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களால் சரியாக பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. சில ஓவர்களுக்கு இடையிலேயே விக்கெட்டை பறி கொடுத்தோம். டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை என்றால், அது மிகப்பெரிய பிரச்சினையை கொடுக்கும்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்ததை பார்த்த போது, ஏராளமான கேள்விகள் மனதிற்குள் தோன்றியது. ஆனால் அதற்கான பதில்கள் அளிக்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. பெரிதாக எந்த பதிலும் இல்லை. பவுலர்கள் சிறப்பாக பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது பிட்சிலும் கொஞ்சம் மாற்றம் இருந்தது.

அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக எதிர்பார்த்ததை போல் பனிப்பொழிவும் இருந்தது. ஆனால் சேசிங் செய்ய முடியாமல் தவறவிட்டுவிட்டோம். இந்த போட்டியில் நடந்த தவறை எப்படி திருத்த வேண்டும் என்று ஆராய்வோம். தோல்வியின் போது தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே எனக்குள் சொல்லி வருகிறேன்.

போராட்டத்தில் இருந்து பாதியில் விலகி செல்லக் கூடாது. கடினமான நாட்கள் வரலாம். ஆனால் நிச்சயம் மகிழ்ச்சியான நாட்களும் அருகில் தான் உள்ளது. நிச்சயம் இது எங்களுக்கும் சவாலாக காலம் தான். ஆனால் சவால்களே நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com