ஓய்வுக்கு பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் வருவீர்களா..? விராட் கோலி பதில்

2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடை பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகின.

ஏனெனில் சராசரியாக 36 வயதை தாண்டியுள்ள அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் தாங்கள் தற்போதைய நிலைமையில் ஓய்வு பெறப் போவதில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியிடம், 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் பல வருடங்கள் கழித்து சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அதில் இந்தியாவுக்காக விளையாட ஓய்வில் இருந்து வருவீர்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, "ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை ஒரு அங்கமாக கொண்டு வந்துள்ளது  சில வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஒருவேளை ஒலிம்பிக் தொடரில் நாங்கள் தங்கப்பதக்கத்துக்காக விளையாடுகிறோம் என்றால் அந்த ஒரு போட்டிக்காக நான் மீண்டும் வந்து விளையாடுவேன். அதில் பதக்கத்தை வென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன். அது சிறந்த விஷயமாக இருக்கும். ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பது அற்புதமான உணர்வாக இருக்கும்" என்று கூறினார்.

2028-ல் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் (டி20 வடிவத்தில்) சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com