ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு முதல் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு முதல் வெற்றி
Published on

மும்பை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கார் அணியை (ஏ பிரிவு) சந்தித்தது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே சத்தீஷ்கார் 129 ரன்னும், மும்பை அணி 188 ரன்னும் எடுத்தன. 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சத்தீஷ்கார் அணி 149 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 91 ரன்கள் இலக்கை மும்பை அணி 24.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 41 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் 8 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா கண்டது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் தனது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று நிதானமாக பேட்டிங் செய்த டெல்லி அணி ஆட்ட நேரம் முடிவில் 103 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்தூரில் நடந்த ஆந்திரா-மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) முதல் இன்னிங்சில் முறையே ஆந்திரா 132 ரன்னும், மத்திய பிரதேசம் 91 ரன்னும் எடுத்தன. பின்னர் 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆந்திரா 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி 301 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கரண் ஷின்டே (103 ரன்) சதம் விளாசினார். அடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி 16.5 ஓவர்களில் வெறும் 35 ரன்னில் சுருண்டது. இதனால் ஆந்திர அணி 307 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. மத்திய பிரதேச அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் தாரை வார்த்தது. ஆந்திர வேகப்பந்து வீச்சாளர் சசிகாந்த் 6 விக்கெட்டுகளை அள்ளினார். தோல்வியின் மூலம் மத்தியபிரதேச அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

பிஷன்சிங் பெடியின் 44 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

ரஞ்சி கிரிக்கெட்டில் பாட்னாவில் நடந்த ஆட்டத்தில் பீகார் அணி ( பிளேட் பிரிவு) 3 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூரை வென்றது. பீகார் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்தோஷ் அமான் புதிய சாதனை படைத்தார். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து அவர் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடப்பு தொடரில் அவர் மொத்தம் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ரஞ்சி வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு பிஷன்சிங் பெடி 1974-75-ம் ஆண்டில் 64 விக்கெட் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது 44 ஆண்டு கால சாதனையை இந்திய விமானப்படையில் பணியாற்றும் 32 வயதான ஆஷ்தோஷ் அமான் முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com