

புனே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் இந்த போட்டி தொடர் பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், குல்திப் யாதவ், பிரசித் கிருஷணா.
இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவில் மிலான், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷித், ரீசி டாப்லீ