ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
Published on

ஆன்டிகுவா,

வெஸ்ட்இண்டீசில் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இப்போடியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆங்கிரிஷ் ரகுவன்சி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர்.

ரகுவன்சி 6 ரன்னிலும், ஹர்னூர் சிங் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 12.3 ஓவர்களில் 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், 3-வது விக்கெட் இணையான ஷேக் ரஷித், கேப்டன் யாஷ் துல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர்.

45.4 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. அதன்பின், ஷேக் ரஷித் 94 ரன்(108 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் யாஷ் துல் 110 ரன்(110 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 12 ரன், விக்கெட் கீப்பர் தினேஷ் பானா 20 ரன்(4 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜேக் நிஸ்பட், வில்லியம் சல்ஸ்மேன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.அதிகபட்சமாக லச்லன் ஷா 51 ரன்(66 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார்.

இதனால் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் விக்கி ஆஸ்ட்வால் 3 விக்கெட், ரவிகுமார் மற்றும் நிஷாந் சிந்து தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்மூலம், இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் தொடர்ந்து 4வது முறையாக அடியெடுத்து வைத்தது. இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com