ரோகித், கோலி, இல்லை... அந்த 2 வீரர்கள் நன்றாக விளையாடினால் மட்டுமே இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் - மைக்கேல் வாகன்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2007-ம் ஆண்டு மட்டுமே டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் கடந்த 17 வருடங்களாக டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இம்முறை ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன் களமிறங்கி இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒருவேளை இந்தியா உலகக்கோப்பை வெல்ல வேண்டுமெனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்கு ஹர்திக் பாண்ட்யா தேவை. இந்தியாவின் வெற்றிக்கு அவர் நன்றாக விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் அபாரமாக விளையாடக்கூடிய ஹர்திக் பாண்ட்யா இருப்பது இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடாமல் போனால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கவில்லை.

இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரிஷப் பண்ட் விளையாட வேண்டும். குறிப்பாக காயத்தை சந்திப்பதற்கு முன்பு எப்படி விளையாடினாரோ அதே போன்ற ஆட்டத்தை அவர் தற்போது விளையாட வேண்டும். அதே போலவே ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யாவும் அசத்துவது இந்தியாவின் வெற்றிக்கு அவசியம்" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com