

சிட்னி,
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட், 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய பெண்கள் அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருத்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா 22 ரன்னில் வெளியேறினார்.
அடுத்துவந்த கேப்டன் மிதாலி 8 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய யாஷ்டிஹா 3 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அடுத்துவந்த வந்த ரிஷா கோஷுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார். 94 பந்துகளில் 86 ரன்கள் குவித்த மந்தனா ஆஸ்திரேலிய வீராங்கனை தஹ்லா மெக்ராத் பந்துவீச்சில் அவுட் ஆனார். 44 ரன்கள் எடுத்திருந்த ரிஷா கோஷ் போல்ட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அந்த அணியின் வீராங்கனை தஹ்லா மெக்ராத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய பெண்கள் அணி விளையாடி வருகிறது.