

துபாய்,
2021 டி 20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியில் இந்திய - நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இரண்டு அணிகளுமே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ நியமிக்கப்பட்டுள்ளதை கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ செயல்பட்ட போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தது. நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ, இந்திய அணி எதிர்கொள்ளும் முக்கியமான ஐசிசி போட்டிகளில் அனைத்திலும் இவர் நடுராக இருந்து இருக்கிறார்.
முன்னதாக 2014ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனல் போட்டி, 2015 உலக கோப்பை அரைஇறுதி போட்டி, 2016 டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிரோபி இறுதி போட்டி, 2019 உலக கோப்பை அரைஇறுதி போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி (3வது நடுவர்) என இந்திய அணி தோல்வி பெற்ற அனைத்து போட்டிகளிலும் இவரே நடுவராக இருந்துள்ளார்.
குறிப்பாக 2019ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆன பிறகு இவர் குடுத்த ரியாக்சன் இன்று வரை மீம்ஸ்களாக வைரலாகி வருகிறது. இன்று நடக்கும் போது இந்திய அணிக்கு கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டி போன்றது. இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.