

சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சுடன் மல்லுகட்டியது.
ஐதராபாத் கேப்டன் வில்லியம்சனின் பாட்டி மரணம் அடைந்து விட்டதால் அவர் அவசரமாக சொந்த நாட்டுக்கு (நியூசிலாந்து) புறப்பட்டார். இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர்குமார் ஏற்றார். வில்லியம்சனுக்கு பதிலாக ஆடும் லெவனில் ஷகிப் அல்-ஹசனுக்கு இடம் கிடைத்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஹர்பஜன்சிங் சேர்க்கப்பட்டார்.
டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் இன்னிங்சை டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் தொடங்கினர். இந்த ஐ.பி.எல். சீசனில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய பேர்ஸ்டோ (இந்த ஆட்டத்துடன் தாயகம் திரும்பி விடுவார்) டக்-அவுட் ஆனார். அவர் ஹர்பஜன்சிங்கின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து மனிஷ் பாண்டே இறங்கினார்.
வார்னர் - பாண்டே ஜோடி சென்னை பந்து வீச்சை வெளுத்து கட்டியது. ஹர்பஜன்சிங்கின் அடுத்த ஓவரில் இருவரும் சிக்சர் அடித்தனர். அதிரடி காட்டிய மனிஷ் பாண்டே 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து வார்னர் தனது 43-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவரது 7-வது அரைசதமாக இது அமைந்தது. அணியின் ஸ்கோர் 120 ரன்களாக உயர்ந்த போது (13.3 ஓவர்) இந்த ஜோடியை ஹர்பஜன்சிங் பிரித்தார். அவரது பந்து வீச்சில் வார்னர் (57 ரன், 45 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அடுத்து வந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் தனது பங்குக்கு 26 ரன்கள் (20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் அந்த அணி 190 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இறுதி கட்டத்தில் சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. மனிஷ் பாண்டே 83 ரன்களுடனும் (49 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), யூசுப் பதான் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரை வாட்சன் மெய்டனாக்கினார். 11-வது பந்தில் தான் சென்னை அணி ரன் கணக்கை தொடங்கியது. பிளிஸ்சிஸ் 1 ரன்னில் ரன்-அவுட் ஆனார். ஆனாலும் இந்த மந்தமான தொடக்கத்தில் இருந்து சென்னை அணி வெகுசீக்கிரமாக மீண்டது. 2-வது விக்கெட்டுக்கு வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் ஓடவிட்டு உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் ரஷித்கானின் சுழலில் கொஞ்சம் தடுமாறிய ரெய்னா (38 ரன், 24 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசியில் அவரது பந்து வீச்சில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார்.
மறுமுனையில் ஷேன் வாட்சன் அமர்க்களப்படுத்தினார். நடப்பு தொடரில் முதல்முறையாக மெச்சத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சந்தீப் ஷர்மா, ரஷித்கானின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டார். அதிரடி ஜாலம் காட்டிய வாட்சன் 5-வது சதத்தை 4 ரன்னில் நழுவ விட்டார். வாட்சன் 96 ரன்களில் (53 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) புவனேஷ்வர் குமார் ஷாட்-பிட்ச்சாக வீசிய பந்தை அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார்.
ஆனால் 18 மற்றும் 19-வது ஓவர்களில் வெறும் 7 ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசினார். இதில் கேதர் ஜாதவ் ஒரு சிக்சர் அடிக்க முதல் 3 பந்தில் 8 ரன் வந்தது. 4-வது பந்தில் அம்பத்தி ராயுடு (21 ரன்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் 5-வது பந்தில் ஜாதவ் (11 ரன், நாட்-அவுட்) ஒரு ரன் எடுத்து சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.
சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11-வது லீக்கில் விளையாடி 8-வது வெற்றியை பெற்ற சென்னை அணி இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பையும் (பிளே-ஆப்) உறுதி செய்தது. அத்துடன் ஐதராபாத்திடம் முந்தைய லீக்கில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. ஐதராபாத் அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.
ஒரே அணி
இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த சிறப்பை இந்த சீசனிலும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.
இந்த சீசனில் உள்ளூரில் தோல்வி காணாத (சென்னையில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி) ஒரே அணியும் சென்னை தான்.