

சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்தது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-குவிண்டன் டிகாக் களமிறங்கினர். இந்நிலையில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் டிகாக்(2) கேட்ச் ஆனார்.
அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா 44 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா(0), க்ருனால் பாண்டியா(1), பொல்லார்ட்(2) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், அணியின் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. இஷான் கிஷன் 26 ரன்களில் பவுல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.
ஷிகர் தவான் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் சாஹர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித்(33) எல்.பி.டபில்யூ. முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் பிறகு ஆட்டம் மெதுவாக மும்பை அணிக்கு சாதகமாக திரும்பியது. ஆனால் இறுதி ஓவர்களில் லலித் யாதவ்-சிம்ரன் ஹெட்மேயர் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றி, டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.