ஐபிஎல் நிறைவு விழா : முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்களை கவுரவிக்கும் ராஜஸ்தான் அணி

2008 ஆம் ஆண்டு ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்று இருந்தது.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

அகமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி, பாலிவுட் நட்சத்திரங்களின் வருகை என ஐபிஎல் நிறைவு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. நிறைவு விழா முடிந்த பிறகு போட்டி 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியை காண 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. முதல் சீசனுக்கு பிறகு ராஜஸ்தான் அணி விளையாடவுள்ள முதல் இறுதி போட்டி இதுவாகும். இதனால் இந்த இறுதி போட்டியில் 2008 ஆம் கோப்பை வென்ற வீரர்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கவுரவிக்க உள்ளது.

முனாப் பட்டேல், யூசுப் பதான் சித்தார்த் திரிவேதி, ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சன் போன்ற பல வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் மறைந்த ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com