

சென்னை,
ஐ.பி.எல். போட்டியின் 10வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்பொழுது, கடந்த முறை நாங்கள் விளையாடியபொழுது இருந்த மேற்பரப்பினை விட இந்த முறை நல்ல விதத்தில் அமைந்துள்ளது.
எங்களுக்கு வெற்றி பெற ரன்கள் அதிகம் தேவை. கிறிஸ்டியன் விளையாடவில்லை. ஆனால், ரஜத் படிடார் எங்கள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சுழற்பந்து வீசுவதில் திறமையானவர் என்று கூறினார். கடந்த முறை பெற்ற தோல்விகளை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் இதனை ஒரு போட்டியாக மட்டுமே கவனத்தில் கொண்டு நாங்கள் விளையாடுவோம் என்றும் கோலி கூறினார்.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கோலி 5 ரன்களில் கேட்ச் ஆனார். படிக்கல் 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்களில் வெளியேறினார். படிடார் ஒரு ரன்னில் போல்டானார்.
ஆனால், மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 49 பந்துகளில் 9 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் விளாசினார். 78 ரன்கள் எடுத்திருந்தபொழுது கம்மின்ஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஏ.பி. டி வில்லியர்சும் அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் விளாசினார். 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஜேமிசனும் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராணா (18) மற்றும் கில் (21) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
திரிபாதி (25), மோர்கன் (29), கார்த்திக் (2), ஹசன் (26), ரஸ்செல் (31), கம்மின்ஸ் (6) ரன்கள் எடுத்து வெளியேறினர். ஹர்பஜன் சிங் (2) மற்றும் சக்ரவர்த்தி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது.
இதனால், ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.