ஐ.பி.எல்.: டேவிட் வார்னரின் மாபெரும் சாதனையை சமன் செய்வாரா விராட் கோலி..?

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
ஐ.பி.எல்.: டேவிட் வார்னரின் மாபெரும் சாதனையை சமன் செய்வாரா விராட் கோலி..?
Published on

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது. இறுதிப்போட்டி முடிவில் அதிக ரன் குவித்து யார் முதலிடத்தில் இருக்கிறார்களோ? அவர்களை இந்த தொப்பி அலங்கரிக்கும். அத்துடன் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இந்த தொப்பியை அதிக முறை வென்றவராக டேவிட் வார்னர் சாதனை படைத்துள்ளார். அவர் 3 முறை (2015, 2017 மற்றும் 2019) இந்த தொப்பியை வென்றுள்ளார். அவருக்கு அடுத்து 2- வது இடத்தில் விராட் கோலி, கிறிஸ் கெயில் ஆகியோர் உள்ளனர். இதில் கிறிஸ் கெயில் ஓய்வு பெற்று விட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 18-வது சீசனில் விராட் கோலி அதிக ரன் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்று டேவிட் வார்னரின் அந்த மாபெரும் சாதனையை சமன் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com