

மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும்.
பெங்களூரு அணி தங்கள் கடைசி போட்டியில் கடந்த 8 ஆம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டான கோலி புன்னகையோடு வெளியேறினார். பின்னர் ஓய்வறைக்கு சென்ற பிறகும் புன்னகைத்தபடியே காணப்பட்டார்.
இது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாது. இந்த நிலையில் தற்போது விராட் கோலி இது குறித்து பேசியுள்ளார். பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசிய கோலி, "முதல் பந்தில் டக் அவுட். என் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியாக எனக்கு இது நடந்ததில்லை. இப்போது நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன் அதனால் தான் சிரித்தேன்." என தெரிவித்தார்.
தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு பதில் அளித்த கோலி கூறுகையில், " நான் என்ன உணர்கிறேன் என்பதை அவர்களால் உணர முடியாது. அவர்கள் என் வாழ்க்கையை வாழ முடியாது.
இது போன்ற அறிவுரைகளை கேட்காமல் இருக்க ஒன்று டிவி பார்க்காமல் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கூறுவதில் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு காரியங்களையும் நான் செய்கிறேன்" என அவர் தெரிவித்தார்.