

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு திணறி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாட்டு அரசுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேபோல், பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் இந்திய தேசியக்கொடி லேசர் ஒளிவண்ணத்தில் ஒளிரச் செய்து ஆதரவு அளிக்கப்பட்டது. மேலும் பல நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசும் ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்த பேரழிவு காலங்களில் எங்கள் பிரார்த்தனைகள் இந்திய மக்களுக்காக இருக்கும்; இந்தியாவுடனான ஒற்றுமையை காட்ட, துணை நிற்க வேண்டிய நேரம் இது. இந்திய மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இது நமது பாதுகாப்புக்கு மட்டுமே. ஒன்றாக நாம் அதை செய்ய முடியும். என்று பாபர் அசாம் பதிவிட்டுள்ளார்.