

மும்பை,
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. காயத்தால் அவதிப்படும் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் விளையாட வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், முதல் நாள் ஏலத்துக்கு பிறகு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே எஞ்சி இருந்தார். அதனால் அவரை எடுப்பது குறித்து ஆலோசித்தோம். இந்த ஆண்டில் ஐ.பி.எல்.-ல் அவரால் ஆட முடியாது என்பது தெரியும். ஆனால் அவர் உடல்தகுதியை எட்டி, ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து பந்து வீசும் போது எங்களது பவுலிங்கில் பலமாகி விடுவோம் என்று நம்புகிறேன். அதனால் தான் அவரை வாங்கினோம் என்றார்.
சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் (ரூ.8 கோடி) ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை கொண்ட வீரர்களில் ஒருவர். ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில் அந்த இடத்தை நிரப்ப அவரை போன்ற வீரர் அவசியம் என்பதால் டிம் டேவிட்டை எடுத்தோம் என்றும் ஆகாஷ் அம்பானி கூறினார்.