

சென்னை ,
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வரலாறு படைத்தார்.
இப்போட்டியில் பும்ரா அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் (33) எடுத்த பந்துவீச்சாளராக அவர் சாதனை படைத்தார். இதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் (32 விக்கெட்) சாதனையை அவர் முறியடித்தார். அர்ஷ்தீப் சிங்கும் 32 விக்கெட்டுகளுடன் அஸ்வினுடன் சமநிலையில் உள்ளார்.
போட்டியின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ரா, டிகாக் , ரிக்கெல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் மில்லர் (63), பிரெவிஸ் (45) மற்றும் ஸ்டப்ஸ்(44) இணைந்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 76ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.