கடைசி டெஸ்ட்; சிராஜ் அசத்தல் பந்துவீச்சு.....முதல் இன்னிங்சில் 55 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா...!

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.
image courtesy; twitter/@BCCI
image courtesy; twitter/@BCCI
Published on

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளரான முகமது சிராஜ் வரிசையாக வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களான மார்க்ரம், எல்கர், டோனி டி ஜோர்ஜி, டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்சில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய சிராஜ் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

வெறும் 23.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை கூட தொடவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ரன்கள் அடித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com