ஆர்.சி.பி-க்கு எதிரான ஆட்டம்.... ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?

Image Courtesy: @IPL / @RishabhPant17
ஆர்.சி.பி-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற வீரர்களுக்கு (இம்பேக்ட் வீரர் உட்பட) தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் (எது குறைவோ அது எடுத்து கொள்ளப்படும்) விதிக்கப்பட்டுள்ளது.






