

புதுடெல்லி,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையும், ஒரு நாள் போட்டி அணிக்கான கேப்டனுமான மிதாலிராஜ், 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
36 வயதான மிதாலி ராஜ் நேற்று கூறுகையில், 2006-ம் ஆண்டு முதல் இந்திய 20 ஓவர் அணியில் விளையாடி வந்தேன். இனி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு விடையளித்து விட்டு, 2021-ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்வதில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன். தேசத்திற்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. அதில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க ஆவல் கொண்டுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு தயாராகி வரும் இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள் என்றார்.