

லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் முகமது சிராஜ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்து முகமது சிராஜ் அசத்தி உள்ளார் .
இந்த பட்டியலில், பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா தலா 51 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர். முகமது சிராஜ் 46 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.