

சென்னை,
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற தனது சாதனையை சூர்யவன்ஷி முறியடிப்பார் என்று பட்லர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 6-வது 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், வெல்ஷ் பயர் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்த அவர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.
இந்த இன்னிங்ஸின் மூலம் ஜோஸ் பட்லர், 522 டி20 போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 105 அரைசதங்களுடன் மொத்தம் 14,833 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், 746 போட்டிகளில் 14,803 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பொல்லார்டின் சாதனையை முறியடித்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஜோஸ் பட்லர், "டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரராக இருப்பது மகிழ்ச்சியான உணர்வு. ஆனால் ஒரு நாள் இந்த சாதனையை யாரோ ஒருவர் முறியடிப்பார். என் கணிப்பில் அந்த வீரர் இந்தியாவின் சூர்யவன்ஷியாகதான் இருப்பார்" என்று பாராட்டினார்.
இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி ஏற்கனவே பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையும் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.